20100303

Sri Kamalakkanni Amman Temple - Kalavai

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் (அபிராமி) ஸ்ரீ கமலக்கண்ணியம்மன் கடைக்கண்களே!

கருவறை முன்பு ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனின் விஸ்வரூப தரிசனம்
(மேலும் திருக்கோவில் படங்கள் கடைசியில்)

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில்,
கலவை, ஆற்காடு மாவட்டம்,
வேலூர் - 632 506.

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருள் மகிமை

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மூலவர் --நின்று கொண்டு
சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!
கருவறை முன்பு 8 திருகரங்களுடன் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.
ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் பெருமாளின் தங்கையாகவும்(நெய்வேத்தியமும் பெருமாளை போலவே சைவம்), சக்தியின் வடிவமாகவும், அளவற்ற சக்தியும் கருணையும் உடையவங்க! மனக்கவலை, குடும்ப கஷ்டங்கள்,உடல் நல குறைவு ,முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று கமலகன்னி அம்மனை தரிசித்தால் குறைகள் நீங்கும்,நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வர். & குடும்பத்தில் சிக்கல்கள்,குடும்பத்தில் குழப்பம்,பில்லி,சூனியம்,ஏவேல்,உடல் நல குறைவு முதலியவை இருப்பின் கோவிலில் சென்று கமலக்கண்ணி அம்மனை வழிபட்டு அங்கிருக்கும் சுவாமிகளை சந்தித்து குறைகளை வெள்ளை தாளில் எழதி தர ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருளால் சுவாமிகள் அக்குறைகள் நீங்கி நலம் பெரும் வழியை எழுதி கொடுப்பார். தேவைபட்டால் ஒரு சில நாட்கள் கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார் . அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் வாழ்வில் மகிழ்ச்சியுடன் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள் .அனுபவபூர்வமான உண்மை !!! வருடா வருடம் ஆடி முதல் வெள்ளி கிழமை திருவிழா நடக்கும் . திருக்கோவில் புதுபிக்கும் பணி நிறைவு பெற்று 29 - 02- 2010 அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. Govinda! Govinda! Govinda!


--------------------------------------------------------------
Any body don’t know tamil read it

Sri kamalakanniamman very powerfull amman

Any evil mind, and any problem in life, please go to sri kamalakkanni amman temple& Pray , Happy & peaceful life starting:) If you want meet swami sachidaanantha.

Tavathiru Sachidaananda swamigal properly maintaining sri kamlakaniamman temple
If you have any doubt send comment .

Sri kamalakkanni amman Temple,
Kalavi , Arcot Maavattam ,
Vellore.
India

Om namo narayana
---------------------------------------------------------------------------------
திருக்கோவில் வரலாறு
அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தியானவள் பல்வேறு திருநாமங்களோடு பல ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றாள். அவற்றுள் கலவை கமலக்கண்ணியம்மன் ஆலயத்துள் நின்று கமல - தாமரை)தாமரையை ஓட்ட தனது கடைக்கண் பார்வையினால் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் தருவதுடன் பக்தர்களின் குறைகளை தீர்த்தும், துஸ்த சக்திகளைப் போக்கி அருள்பவளாக விளங்குபவள், காமாட்சி பாங்கஜாட்சி மஹாகாளி என்று போற்றப்படும் ஸ்ரீ கமலக்கண்ணித் தாயாவாள். இந்த கம்லக்கண்ணி அம்மன் தேவிதான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குலதெய்வமாகவும் செஞ்சிக் கோட்டையைக் காத்து வருகின்ற காவல் தெய்வமாகவும் விளங்குபவள்.

பற்றற்ற யோகியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இமயமலைச் சாரலிலும் வட இந்தியாவில் பல இடங்களிலும் பாத யாத்திரையாகச் சென்று பல தத்துவ ஞானிகளின் ஞான உபதேசங்களினால் தியானம், யோகம், இவற்றில் மேன்மையை அடைந்த சிறந்த தவயோகியாக விளங்குபவர்கள் தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். “சும்மாயிரு சொல்லற” என்ற அருணகிரியாரின் வாக்குக்கேற்ப மௌன விரதத்தை கடைபிடித்து வருகின்ற மகானாக விளங்குகின்ற சுவாமிகள் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தனது அருட்பார்வையினாலேயே போக்கி அருளும் சித்த புருஷராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சுவாமிகள் ஏப்ரல் 6--ஆம் தேதி 1979-ஆம் ஆண்டு கலவை வந்தபோது சுவாமிகளை வரவேற்று ஆதரித்தவர்கள். முன்னாள் மணியம் R.D கிருஷ்ணஸ்வாமி முதலியார் அவர் துணைவியார் திருமதி. சரோஜாம்மாள் அம்மையார் . அப்போது அவர்கள் கலவையில் கட்டிக் கொண்டிருந்த அருள்மிகு கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் திருப்பணி முடியம் தருவாயில் இருந்தது. இதன் பூர்வீக கோவில் செஞ்சி மலையில் உள்ள கோட்டையில் இருப்பதாக சொல்லி சுவாமிகளை அழைத்து போனார்கள். திருக்கோவில் ஸ்தாபகர் அமரர். R.D கிருஷ்ணஸ்வாமி முதலியார் அமரர். திருமதி .சரோஜாம்மாள் இருவரும் சுவாமிகளை தங்கள் இறுதிகாலம் வரை சுவாமிகளை கண்ணைப்போல் கவனித்து வந்தார்கள் .

செஞ்சி மலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் மிகவும் சிறிய கோவில். அம்மன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது . பூஜைகளும் , பராமரிப்பும் இல்லாமல் அம்மன் இருப்பதை அறிந்து சுவாமிகள் மனம் நெகிழ்ந்து போனார்கள். அம்மனை சுவாமிகள் தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டபோது உன்னோடு வந்து விடுகிறேன் மகனே என்ற செஞ்சி கமலக்கண்ணித் தாயின் தெய்வீக அருள்வாக்கினால் ஈர்க்கபட்டு அவளது அருளானையின் வண்ணம் செஞ்சியில் இருக்கிற அம்மனைப் போலவே தான் வாழும் கலவையில்
கமலக்கண்ணியம்மனுக்கு ஆலயம் எழுப்பி உலகம் உய்ய வழிபாடு செய்து வந்தார்கள் .

கலவையில் கோவிலை சுவாமிகள் விரிவு செய்து கொண்டு போனபோதும் கோவில் அமைப்பு சுவாமிகளுக்கு மன நிறைவு தரவில்லை இரத்தினகிரி தவத்திரு . பாலமுகனடிமை சுவாமிகள் தனது 39 ஆண்டு மலைவாசத்தை முடித்து கலவைக்கு வருகை தந்த போது கோவிலை புதுபித்து கட்ட வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்தார்கள் .

பழைய கோவிலை முழுவதும் அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கோவிலை பொலிவுடன் நிர்மாணிக்க திருப்பணிகளை தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னின்று நடத்தினார்கள். இரத்தினகிரி சுவாமிகளின் வெகு முயற்சியாலும், சீரிய வழிக்காட்டியிலும் அடிக்கடி திருப்பணிகளை நேரில் பார்வையிட்டும் வழங்கிய ஆலோசனைகளாலும், இன்று கோவில் கம்பீரமும், கலையழகும் ததும்பி நிற்கிறது . திருப்பணிகளை பார்வையிடகலவைக்கும் , சிற்ப வேலைகளைப் பார்வையிட மகாபலிபுறத்திற்கும் சுவாமிகள் இருவரும் சலிக்காமல் பயணம் மேற்கொண்டார்கள். “இதற்கு எப்படி நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன்” என்று கலவை சுவாமிகள் அடிக்கடி நெகிழ்ந்து சொல்வார்கள் .

பழைய ஆலயத்தை புதுப்பித்து மண்டபம் பிரகாரம், கோபுரம் ,தூண்கள் இவைகளையெல்லாம் சிற்ப வேலைப்பாடுகள் மிளிர அழகுடன் அமைந்திருக்க வேண்டும் என்ற தன்னலமற்ற நோக்கத்தோடு ஆர்வத்தோடும் திருப்பணியைத் தொடங்கினார்கள் ஸ்ரீ கமலக்கண்ணிதாயின் திருவருள் துணையோடு பக்தர்களின் பாத காணிக்கைகளை கொண்டும் எண்ணியவண்ணம திருப்பணிகலை நிறைவேற்றி உள்ளார்கள்.
அழகும் பொலிவும் பெற்றுள்ள ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் திருகோவிலில் கருவறை வாசல் கதவு வெள்ளியிலும் முன் வாசல் கதவுகள் தஞ்சாவூர் பாணியிலும் வடிவமைக்க பட்டுள்ளது.

ஓம் நமோ நாராயணாய!

கோவிலின் முன் தோற்றம்


திருக்கோவில் வாசல்


திருக்கோவில் வாசல் கதவு


தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள் & இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்


மூலஸ்தானம் வெளியில் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் தரிசனம்


பெருமாள் மகாலட்சுமி , சிவன் சக்தி , விநாயகர் , முருகர் , சரஸ்வதி , திருக்கோவில் சுவற்றில் வரிசையாக அழகாக தஞ்சாவூர் பாணியில் படங்கள்



மூலஸ்தானம்


ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் பற்றிய உங்களது மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது


குறிப்பு:

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவில் அருகிலேயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோவிலும் உள்ளது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனை போன்று மூலஸ்தானத்தில் நின்றும் , கருவறை முன்பு மல்லாந்து படுத்து கொண்டும் காட்சி தராங்க!
ஓம் நமோ நாராயணாய!